``மத்தியில் மீண்டும் NDA ஆட்சி அமைந்ததும்... இது மோடியின் உத்தரவாதம் - பிரதமர் மோடி பேசியது என்ன?

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் "மேரா பூத் சப்சே மஸ்பூத்" (எனது வாக்குச்சாவடி மிக வலிமையானது) என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகப் பிரிவைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலைத் தொண்டர்களுடன் காணொளி காட்சி வழியே பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, ``தி.மு.க அரசின் முறைகேடான நிர்வாகத்திற்காக அவர்களைத் தண்டிப்பதற்குத் தமிழக மக்கள் தயாராக இருப்பதை அறிவேன். தமிழகத்தில், தி.மு.க அரசு ஊழலை அமைப்பின் ஒரு பகுதியாகவே மாற்றிவிட்டது. ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் மலிந்துள்ளன. பல அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஊழல், கமிஷன் மற்றும் வசூல் ஆகியவை தி.மு.க அரசின் அடையாளங்களாகவே மாறி வருகின்றன.

மோடி

தி.மு.க மத்திய அரசில் அங்கம் வகித்த காலத்தில்கூட, தமிழகத்திற்குப் புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அவற்றுக்குத் தீர்வுகள் காணப்படவில்லை. ஆனால் இன்றைய சூழல் முற்றிலும் மாறுபட்டது. NDA அரசு ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்களுக்கான பிரமாண்டமான திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இத்திட்டங்கள் மிகத் துரித கதியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பா.ஜ.க தொண்டர்களின் கடின உழைப்பின் காரணமாகவே, தமிழக மக்களிடையே தற்போது ஒரு புதிய சூழல் உருவாகியிருக்கிறது. மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் பா.ஜ.க-NDA கூட்டணியை நம்பிக்கையுடன் உற்றுநோக்கி வருகின்றனர்.

விவசாயிகளின் நலனே NDA அரசின் முதன்மையான முன்னுரிமை. நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நனவாக்கும் திசையில் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் மருத்துவப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், தி.மு.க மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, ​​அவர்களின் அணுகுமுறை தமிழகத்திற்குப் புதிய வளர்ச்சியை எதையும் ஈட்டித் தரவில்லை. எங்கள் அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன.

மோடி
மோடி

உதாரணமாக, பாம்பன் பாலத்தின் கட்டுமானம் எங்களது ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. திட்டங்களின் பயன்கள், எந்தவொரு இடைத்தரகர்களும் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதே எனது அரசின் அணுகுமுறையாக இருக்கிறது. தமிழகத்தில், பி.எம். கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. அதுபோலவே, ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீட்டு கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க அரசின் அணுகுமுறையின் காரணமாக, பல ஏழை எளிய குடும்பங்களால் பி.எம். ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயன்களைப் பெற இயலாமல் போனது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முறையான கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை. தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்படவும் இல்லை. அவ்வாறு முறையாகச் செய்யப்பட்டிருந்தால், தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றிருந்திருப்பார்கள்.

மோடி
மோடி

எனவே, தமிழகத்தில் தி.மு.க அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகளை, பா.ஜ.க தொண்டர்கள் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும். அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறாத, ஆனால் அத்திட்டங்களைப் பெறத் தகுதி வாய்ந்த பயனாளிகளை நீங்கள் கண்டறிய வேண்டும். மத்தியில் மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைந்ததும், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிரந்தர வீடு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இது மோடியின் உத்தரவாதம்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.