எஸ்.ஜே.சூர்யாவுக்கும் போனிகபூருக்கும் இடையே என்ன பிரச்னை? வாலி பட விவகாரத்தில் நடப்பதென்ன?
வாலி படத்தை ரீமேக் செய்வதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் போனிகபூருக்கும் இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த 1999ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்து, எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடையாளத்தை பெற்றுத்தந்தது. கோலிவுட்டில் ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் போனிகபூர் முடிவு செய்திருந்தார். அதன்படி, வாலி படத்தின் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ். எஸ். சக்கரவர்த்தி இடமிருந்து படத்தை ரீமேக் செய்யும் உரிமையை பெற்றார் போனி கபூர்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட எஸ்.ஜே.சூர்யா, வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கு தன்னுடைய அனுமதி வேண்டும் என்றும், படத்தை ரீமேக் செய்ய தடைவிதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கில் இந்தப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை ஆரம்பிப்பதில் போனி கபூருக்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போது போனி கபூர் இந்தப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். இதனை தடுக்கும் வகையில் எஸ்.ஜே. சூர்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேல்முறையீட்டுக்கு முக்கியமான காரணம், போனிகபூருடனான ஒப்பந்தத்தில் ஸ்க்ரிப்ட் ரைட்டராக எஸ்.ஜே.சூர்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அதனால் அவர் அனுமதியில்லாமல் படத்தை ரீமேக் செய்ய முடியாது. கடந்த 2017 ஆம் ஆண்டு வந்த ஆரண்ய காண்டம் படத் தயாரிப்பாளர்கள் மீது அப்படத்தின் இயக்குநர் தியாகராஜ குமாரராஜா வழக்கு தாக்கல் செய்திருந்தார். அப்போது படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் அதன் ரீமேக் உரிமையை எழுதியவருக்கு இருக்கிறது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை மேற்கொள் காட்டி உச்சநீதிமன்றத்தை எஸ்.ஜே.சூர்யா நாட இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.