சிம்மம்: 10 -ல் குரு பதவியைப் பறிப்பாரா? - குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 கணித்தவர் கே.பி.வித்யாதரன்

இதுவரை பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து அற்புத பலன்களைத் தந்து வாழ்வில் வெற்றிப்பாதையில் நடத்திய குருபகவான் மே - 1 ம் தேதிமுதல் தற்போது பத்தாம் இடத்துக்கு வந்து பலன் தர இருக்கிறார்.

பத்தில் குரு பதவியைப் பறிப்பார் என்பது பழமொழி. பழமொழியைக் கேட்டுப் பதற்றப்பட வேண்டியதில்லை. குருபகவானி பார்வை நல்ல பலன்களைக் கொடுக்கும்.

வெற்றிகள் குவியும் என்றாலும் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதிகாரிகள் உங்களுக்குப் புதிய பொறுப்புகளை வழங்குவார்கள். முக்கியக் கோப்புகளில் அலட்சியம் காட்டாதீர்கள். என்றாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதால் எதையும் தைரியமாக சமாளிப்பீர்கள். அவமானகரமான சூழல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

குருபகவான்

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் 2-ம் வீடான கன்னியைப் பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். பேச்சிலும் ஒரு முதிர்ச்சி பிறக்கும். வரவேண்டிய பணவரவு வந்துசேரும். கொடுக்கல் - வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

குருபகவான் 4 -ம் வீடான விருச்சிகத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். அவர்களின் பேச்சில் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வாகன வகையில் செலவு அதிகரிக்கும் என்றாலும் புதிய வாகனத்தை மாற்றுவீர்கள்.

குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கு சாதகமாக முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.5.24 முதல் 12.6.24 வரை குருபகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் பெருகும். பொறுப்புகள் பதவிகள் தேடி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். நிர்வாகத்திறன் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை குருபகவான்ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பதற்றம் அதிகரிக்கும். தொட்டதெற்கெல்லாம் கோபப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்து விலகும். சிலருக்குத் தூக்கம் கெடும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே சந்தேகத்தைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்கமுடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும்.

சிம்மம்

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை குருபகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் திடீர் யோகம் உண்டு. பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் வாய்க்கும். வழக்கு சாதகமாகும். உங்கள் வார்த்தைக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு கூடும். சகோதரங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

வியாபாரம்

சந்தை நிலவரங்களை அறிந்து கொள்முதல் செய்யப்பாருங்கள். மூன்றாம் நபரின் பேச்சைக்கேட்டுப் புதிய தொழில் முயற்சிகளில் இறங்க வேண்டாம். பணியாளர்களின் தொந்தரவு அதிகரிக்கும். புதிய பணியாளர்களைச் சேர்க்கும் முன் நன்கு விசாரித்துச் சேர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கெமிக்கல், கமிஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் முரண்டு பிடித்த பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ராசி மண்டல தட்சிணாமூர்த்தி

உத்தியோகம்

பணிச்சுமை ஓரளவு இருக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். தேவையில்லாமல் விடுப்புகள் எடுக்க வேண்டாம். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். மூத்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகலாம். கலைஞர்களை சிலர் விமர்சித்துப் பேசுவார்கள். அதைப் பொருட்படுத்த வேண்டாம். போராடிப் படைப்புகளை வெளியிடுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு அனுபவப்பாடத்தைக் கற்றுக்கொடுத்து வாழ்வில் நம்பிக்கையை உயர்த்தும்.

பரிகாரம்: அனுஷம் நட்சத்திர நாளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.