கன்னி : 9 - ல் குரு... வெற்றி நிச்சயம்... குருப்பெயர்ச்சி பலன்கள் கணித்தவர் கே.பி.வித்யாதரன்!

இதுவரை உங்கள் ராசிக்கு 8 -ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மையும் அடிக்கடி ஆரோக்கியக் குறைவையும் தந்து தள்ளாட வைத்த குருபகவான் தற்போது மே 1 முதல் 9 - ம் வீட்டில் அமர்ந்து பலன் தர இருக்கிறார்.

ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது பழமொழி. இதுவரை உங்களைப் பாடாய்படுத்திய பிரச்னைகளில் இருந்து விடுவித்து உங்களைப் பலவிதங்களில் முன்னேறச் செய்து நற்பலன்களை வாரி வழங்க இருக்கிறார்.

இனி நல்லதே நடக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பூர்விகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்குத் திருமணம் தள்ளிப்போகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பேச்சில் இனிமையும் முதிர்ச்சியும் தெரியும்.

குருபகவான்

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் உங்கள் ராசியை 5 -ம் பார்வையாகப் பார்ப்பதால் இதுவரை துவண்டுபோயிருந்த உங்கள் முகம் பிரகாசமாகும். அழகு, இளமை கூடும். உற்சாகமாக இருப்பீர்கள். இதுவரை உழைப்பிற்கு ஏற்பப்பலன் இல்லையே என்று புலம்பிக்கொண்டிருந்த நிலைமை மாறும். உழைப்பிற்கு ஏற்ப கை மேல் பலன் கிடைக்கும். சேமிப்பில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் கடனின் ஒரு பாதியைத் தந்துமுடிப்பீர்கள். இழுபறியாக இருந்த விஷயங்களை நினைத்தபடி முடிப்பீர்கள். அனைத்து முயற்சியிலும் வெற்றிபெறும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குப் பிராத்தனைகளை செலுத்துவீர்கள். இதுவரை நீங்கள் யாருக்கெல்லாம் உதவினீர்களோ அவர்கள் எல்லாம் இப்பொழுது உங்களுக்கு உதவுவார்கள். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.5.24 முதல் 12.6.24 வரை குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சுபசெலவுகள் அதிகரிக்கும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களுக்குப் பிடித்தமான படிப்பில் இடம் கிடைத்து நன்கு படிப்பார்கள். நண்பர்களின் உதவி உண்டு.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மார்க்கெட் மூலம் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடுவாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மகள் அல்லது மகனின் திருமணம் நிச்சயமாகும். ஆன்மிகத்தில் லயித்திருப்பீர்கள்.

வியாபாரம்!

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை குருபகவான்மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அலைச்சல் இருக்கும். சகோதர வகையில் சின்னச் சின்ன வருத்தங்கள் வந்துபோகும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு உஷ்ணத்தால் உடல்நலக் குறைவும், அநாவசியமாகக் கோபப்படாதீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

வியாபாரம்

குரு பகவான் 3 - ம் வீட்டைப் பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்து வந்த போராட்ட நிலை மாறும். போட்டிகளை சமாளித்து வெற்றிபெறுவீர்கள். பணியாளர்களால் இருந்த பிரச்னைகள் நீங்கும். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றுவீர்கள். அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் வாய்ப்பார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்துமோதல்கள் நீங்கும்.

கன்னி

உத்தியோகம்

குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பார். வெகுநாள்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு சம்பள உயர்வு தேடிவரும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். பணிச்சூழல் இனிமையாக மாறும். கணினி துறையினர்களுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்குப் பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கிசுகிசுக்கள் ஓயும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி திக்குத் தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்த உங்களுக்கு வாழ்க்கைப் பாதையைக் காட்டி வெற்றிப்பாதையில் நடத்தும்.

பரிகாரம்: மூலம் நட்சத்திர நாளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வணங்குங்கள். ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். சுபிட்சம் உண்டாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.