துலாம்: அஷ்டம குரு கஷ்டம் தருவாரா? - குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 - கணித்தவர் கே.பி.வித்யாதரன்!

இதுவரை உங்கள் ராசியைப் பார்த்து உங்களை பலப்படுத்தி வழிநடத்திய குருபகவான் தற்போது ராசிக்கு மறைவு ஸ்தானமான 8 ம் இடத்துக்கு மே 1 -ம் தேதி சென்று சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

அஷ்டம குரு கஷ்டம் தருவாரோ என்கிற கவலையை விட்டுவிடுங்கள். குரு மறைவதால்அலைச்சல் ஏற்படும் என்றாலும் அதனால் ஆதாயமும் உண்டு. வருமானம் குறையாது. அதேவேளை செலவுகளும் வரிசை கட்டும். பிரச்னைகளை எதிர்நோக்கி அவற்றைக் கடந்துவரும் மனவலிமையை குருபகவான் கொடுப்பார். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடிக்காமல் விட்டுக்கொடுத்துப் போகப் பழகுங்கள். சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

குடும்பம்

பழைய கடன் பிரச்னை தலைதூக்கும். என்றாலும் அதை அடைக்கப் புதுவழி கண்டுபிடிப்பீர்கள். என்றாலும் மனத்தின் மூலையில் சிறு அச்ச உணர்வு இருந்துகொண்டே இருக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போங்கள். மூன்றாவது நபரிடம் உங்கள் குடும்ப ரகசியங்களைச் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். பணிச்சுமை காரணமாகத் தூக்கம் குறையும். சுற்றி இருப்பவர்களைக் குறை கூறிக்கொண்டே இருக்க வேண்டாம். அவர்களை மதித்து நடத்துங்கள், பிரச்னையில் பாதி முடிந்துவிடும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் உங்கள் தன குடும்ப வாக்கு ஸ்தானமான விருச்சிகத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்து சங்கடங்கள் தீரும். நல்லது நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்கவும் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

குரு உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டைப் பார்ப்பதால் மனம் உற்சாகமாகும். தாயாருடனான வாக்குவாதங்கள் விலகும். பிதுர்வழி சொத்துகள் கைக்குவரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்தக் காலகட்டம் நல்ல முன்னேற்றமாக அமையும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 12 -ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்றுவருவீர்கள். வீண் கவலைகளால் தூக்கம் பாதிக்கப்பட அனுமதிக்காதீர்கள். யோகா, தியானம் பழகுவது நல்லது.

குருபகவான்

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.5.24 முதல் 12.6.24 வரை குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். செய்யாத தவறுக்குப் பழி பொறுப்பு ஏற்க வேண்டிவ்ரும். சகோதர வகையில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். பயணங்களின் போது மிகுந்த பாதுகாப்பு தேவை. அவசரப்பட்டுப் புதிய முதலீடுகளில் இறங்க வேண்டாம். அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியத்தைத் தவிருங்கள்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணியிடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தள்ளிப்போன பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சிக்கலான பிரச்னைகளையும் உங்கள் சமயோஜித புத்தியாம் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். வீடு, மனை அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை குருபகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் வாழ்க்கைத் துணை வழியில் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பழைய சொத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்து வாங்குவீர்கள்.

வியாபாரம்

தொழிலில் பற்று வரவு உயரும். குருபகவானின் பார்வை வாக்கு ஸ்தானத்தில் விழுவதால் நயமாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். கடையைப் புது இடத்துக்கு மாற்றி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசு சம்பந்தமான வரி விஷயங்களில் கவனம் தேவை. பங்குதாரர்களோடு இருந்த மோதல் போக்கு விலகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகம்

உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் நண்பர்களாவார்கள். சக ஊழியர்களிடம் இணக்கம் காட்டுங்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பொதுவெளியில் பேச வேண்டாம். புது வேலைக்கு மாறும்முன்பு ஒருமுறைக்குப் பலமுறை ஆலோசனை செய்யுங்கள். கணினி துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். புது சலுகைகள் கிடைக்கும். வேலைபளு அதிகரிக்கத்தான் செய்யும். கலைஞர்களுக்கு ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.

துலாம்

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை அடையாளம் காட்டி மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறச் செய்யும்.

பரிகாரம்: சித்திரை நட்சத்திரநாளில் நவகிரக குருவுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி நிச்சயம் உண்டு.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.