தனுசு: 6 - ல் மறையும் குரு அல்லல் தருவாரா? - குருப்பெயர்ச்சி பலன்கள் கணித்தவர் கே.பி.வித்யாதரன்!

இதுவரை உங்கள் ராசிக்கு 5 ம் இடத்தில் இருந்து உங்களை பலப்படுத்திய குருபகவான் தற்போது 6 -ம் வீட்டில் சென்று மறைக்கிறார். குருபகவான் 6 -ம் வீட்டில் மறைந்தாலும் உங்களுக்கு யோகபலன்களையே தருவார். என்றாலும் முக்கிய விஷயஙளில் கவனம் தேவை.

பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் திடீர் செலவுகள் அதிகரிப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரும். எனவே சிக்கனம் தேவை. வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறப் பாருங்கள். உங்களிடம் பழகுபவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.

குருபகவான்

சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். தாழ்வுமனப்பான்மையை விட்டுவிடுங்கள். மனஇறுக்கம் அதிகமாகும். உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் தன, குடும்ப வாக்குஸ்தானமான 2 -ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் தெளிவு பிறக்கும். வராமலிருந்த பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீர்ந்து ஆரோக்கியமான விவாதங்கள் வந்து நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். குருபகவான் உத்தியோகஸ்தானமான 10 -ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை கிடைக்கும். கௌரவப்பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். சூழ்ச்சியால் உத்தியோகத்தில் பதவியுயர்வை இழந்தவர்களுக்கு இனி அதிக சம்பளத்துடன் பதவி உயர்வு வந்து சேரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். அரைகுறையாக நின்று போன கட்டடப் பணிகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். சிலர் வேறு கட்சிக்கு மாறுவார்கள். சகாக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

தனுசு

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.5.24 முதல் 12.6.24 வரை குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. புதிய வேலை கிடைக்கும். தந்தையின் உதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களைகட்டும். அரசால் ஆதாயமுண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டிற்கு புதிய சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல்கள் அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் பயணங்கள், வீண் செலவுகள் என அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சிறு சிறு விபத்துகள், உடல்நலக்குறைவுகள் வந்து போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மகனுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வீடு மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பெயர், புகழ் கௌரவம் கூடும்.

வியாபாரம்

தெரியாத வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கடன் வாங்கி முதலீடு செய்வதையும் தவிர்த்துவிடுவது நல்லது. இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். எவ்வளவு அள்ளித்தந்தாலும் வேலையாட்கள் நன்றியில்லாமல் இருக்கிறார்களே என அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். உங்களின் அன்பான பேச்சால் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் எடுத்தெறிந்துப் பேசினாலும், ஆத்திரப் படாதீர்கள். அன்போடு பேசி அவர்களை வழிக்குக் கொண்டுவாருங்கள்.

வியாபாரம்!

உத்தியோகம்

பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். ஆனால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். காத்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உங்கள் இருக்கைத் தேடி வரும். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி அலைகழித்தாலும் மறைமுக வெற்றியைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.