மகரம்: 5 -ல் குரு... அதிர்ஷ்டம் தருவாரா? - குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 கணித்தவர் கே.பி.வித்யாதரன்

இதுவரை ராசிக்கு 4 -ம் வீட்டில் அமர்ந்து எதிலும் தடுமாற்றத்தைக்கொடுத்து இன்பங்களை அனுபவிக்க விடாமல் தடுத்த குருபகவாம் மே மாதம் 1 - ம் தேதி முதல் 5 -ம் இடமான ரிஷபத்தில் அடியெடுத்துவைக்கிறார்.

5 - ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். எனவே அதில் நுழைந்ததும் குருபகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பதுடன்,வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தையும் அமைத்துத் தருவார். குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவும், வாக்குவாதமும் இருந்த நிலையை மாற்றுவார். ஒரே வீட்டுக்குள் ஒட்டுறவு இல்லாமல் பிரிந்து இருந்தவரர், அந்த நிலை மாறி மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

பிள்ளை இல்லையே என்று ஏங்கித்தவித்த தம்பதியருக்கு கண்ணுக்கழகான குழந்தை பிறக்கும். படுத்த படுக்கையாய் இருந்த தாய் எழுந்து நடப்பார். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் மரியாதை கிடைக்கும். இனி உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். குலதெய்வ கோவிலுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

ராசிக்கு குருபகவானின் பார்வை கிடைப்பதால் எதையோ இழந்ததைப்போல் இருந்த உங்கள் முகம் மலரும். அழகு, இளமை கூடும். கூட்டத்தில் பளிச் என்று தனியாகத் தெரிவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும்.

9 - ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் தந்தையாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

11 - வது வீட்டை குருபகவான் பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கி, பாசமழை பொழிவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப்புடவை, தங்க ஆபரணம் வாங்கித்தருவீர்கள். அரசியவாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.

திருவலிதாயம் குருபகவான்

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.5.24 முதல் 12.6.24 வரை குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால்திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்கள் வீட்டு விஷேசங்களை எடுத்து நடத்துவீர்கள். தொலைதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தினர், மொழியினர் உதவுவார்கள். ஆனால் சிறு சிறு விபத்துகள் வந்து போகும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் செல்வம், செல்வாக்குக் கூடும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். சொத்து வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சீராகும். உறவினருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சிலருக்குப் புதிய வாகனம் அமையும் யோகம் வாய்க்கும். வசதியான வீட்டிற்கு இடமாறுவீர்கள்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சகோதரர்கள் உதவுவார்கள். புது வாகனம், புதிய வீடு மனை வாங்கும் யோகம் வாய்க்கும். பெரிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டிலிருப்பவர்களின் உதவி கிடைக்கும். செல்வாக்கு கூடும்

வியாபாரம்

வியாபாரத்தில் இதுவரை இருந்துவந்த திண்டாட்டம் மாறூம். உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய முதலீடுகள் போடுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பங்குதாரர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களின் தொல்லை விலகும். கணினி, உணவு, எண்டர்பிரைஸ், கமிசன் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகம்

எதற்கெடுத்தாலும் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள், இனி நட்பாக இருப்பார்கள். பணிச்சுமை குறையும். மேலதிகாரியுடனான பனிப்போர் விலகும். கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். கலைஞர்கள் மறைந்திருந்த உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். நாடாளுபவர்களின் கரங்களால் பரிசு கிடைக்கும்.

திருச்செந்தூர் முருகன்

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களைச் சீர்செய்வதுடன் மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: அசுவினி நட்சத்திர நாளில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.