வேங்கைவயல் விவகாரம்: `3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம்  செய்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

வேங்கைவயல்

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், கிராம மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, "2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்களாகி விட்டன. புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு காவல்துறை தரப்பில், "உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என உறுதி தருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இதை பதிவுசெய்த நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். அன்றைய தினத்தில் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.