சிவகங்கை: ``காவல்துறை அரணுக்குள் வாழும் கச்சநத்தம் மக்கள்..! - ஸ்பாட் விசிட் ரிப்போர்ட்

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் கடந்த 2018-ல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிவகங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பளித்தது.

கொலைசெய்யப்பட்டவர்கள்

பல்வேறு அச்சுறுத்தல், குறுக்கீடுகளைக் கடந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சிறப்பாக வழக்காடி இந்த தீர்ப்பு பெற காரணமாகியுள்ளார்கள். அதே நேரம் தண்டனை பெற்றுள்ளவர்கள் அப்பீலுக்கு செல்லத் தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்தத் தீர்ப்பு ஆறுதலை அளித்துள்ளதா என்பதை அறிய திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்துக்குச் சென்றோம்.

கச்சநத்தம்

திருப்பாச்சேத்தியிலிருந்து கச்சநத்தம் செல்லும் சாலை வழியெங்கும் ஆங்காங்கு காவல்துறையினர் அமர்ந்திருக்கிறார்கள். ஆவராங்காடு தாண்டி கச்சநத்தம் கிராமத்துக்குகிராமத்துக்குள் நம் வாகனம் திரும்பும்போதே அங்கிருக்கும் காவல்துறையினர் நம்மை விசாரித்துவிட்டுத்தான் அனுமதிக்கிறார்கள்.

கச்சநத்தம் நுழைவு வாயில் பள்ளிக்கூடம் அருகில் காத்திருக்கும் காவல்துறையினர் நம்மை தடுத்து நிறுத்தி, `ஏன் வந்தீர்கள் எதற்கு வந்தீர்கள்? என்று விசாரிக்க, நாங்கள், பத்திரிகையாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க வந்தோம் என்று பொறுமையாக பதில் அளித்தாலும், அங்கிருந்த தனிப்பிரிவு காவலர், இங்கெல்லாம் நீங்க வர அனுமதியில்லை என்று நம்மை விரட்டும் வகையிலும், மிரட்டும் வகையிலும் பேசினார்.

ஊர் முழுக்க போலீஸ்

பிரச்னை ஒன்றுமில்லை சார், கச்சநத்தம் கிராமத்துக்குள் செய்தியாளர்கள் யாரும் வரக்கூடாது என அறிவித்துவிடுங்கள். நாங்கள் வர மாட்டோம் என்றோம்.

அதையெல்லாம் எங்களிடம் பேச வேண்டாம். மேலதிகாரிகளிடம் வேண்டுமானல் போய் புகார் சொல்லுங்கள். எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்த தனிப்பிரிவு காவலர் மட்டும் தொடர்ந்து மிரட்டும் தொனியிலயே பேசினார். அது மட்டுமில்லாமல் மொபைலில் நம்மை படம் எடுப்பதும், ஐ.டி கார்டை படமெடுப்பதுமாக இருந்தார்.

கச்சநத்தம்

அதன்பின்பு, அங்கிருந்த மற்றொரு இன்ஸ்பெக்டர் நாம் வந்திருக்கும் தகவலை உயரதிகாரிகளுக்கு அலைபேசியில் தெரிவிக்க பின்பு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்துக்கொள்ளுங்கள் என்று அனுமதித்தார். ஆனாலும் தனிப்பிரிவு காவலர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு, அவர்களை அழைத்து வருவதாக சென்றவர்கள், வயல் வேலைக்குச் சென்றுவிட்டதாக தகவல் சொன்னார்கள். வயல்காட்டில் சென்று சந்திப்பதாக நாம் சொன்னதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல் பேச விரும்பிய ஊர்காரர்களையும் நம்மிடம் பேச விடவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரிடம் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

கச்சநத்தம் மக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பது நல்ல விஷயம்தான். அவர்களுடைய சூழலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். அதேநேரம் கடுமையான கட்டுப்பாடு மக்களை நடுங்க வைக்கும். சொந்த ஊரில் அவர்களை சுதந்திரமாக இயங்க விடுவதும், செய்தியாளர்களை கடமையை செய்ய அனுமதிப்பதும்தான் காவல்துறையினரின் பணிக்கு பெருமை சேர்க்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.