நடனம், இசை மூலம் திருக்குறள்: கலைஞர்களின் உலக சாதனை முயற்சி

 

மயிலாடுதுறை: திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் பரதநாட்டியம் மூலமாகவும், இசை, கவிதை, உரைநடை, பாட்டு மூலமாக 12 மணி நேரத்தில் வெளிப்படுத்தி உலக சாதனை முயற்சி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவள்ளுவரின் உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்தும் விதமாக, பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது.

திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும், இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளின் பொருளையும், தமிழ் எழுத்துகள் பதித்த ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த பரத கலைஞர்கள் பரதநாட்டிய அசைவுகளின் வாயிலான வெளிப்படுத்தி நடனமாடினர். 

இசை, கவிதை, உரைநடை, பாட்டு ஆகிய வடிவிலும், திருக்குறளை  சுழற்சி முறையில் பயிற்சியாளர்கள் கூற, அதற்கு ஏற்ப முகபாவனை, பரதநாட்டிய முத்திரை அசைவுகளுடன் இந்த சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது.

இதில் சுழற்சி முறையில் 50 பரதநாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி வருகின்றனர். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் பரதநாட்டிய குரு கே.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பரதநாட்டிய மாணவ, மாணவிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.